சிரியாவில் உச்சகட்ட போர்: அமைதித் தூதர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் கோபி அனான்
சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்குமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இங்கு அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு நாடுகளின் தூதராக முன்னாள் ஐ.நா. செயலாளர் கோபி அனான் ஈடுபட்டு வந்தார். சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான அமைதித் திட்டங்களையும் உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில் உச்சகட்டப் போர் நடைபெற்று வருகிறது. மேலும் கோபி அனானின் பதவிக்காலமும் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. இந்நிலையில் தமது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பாமல் அமைதித் தூதர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள கோபி அனான் முடிவு செய்திருக்கிறார். ஆனாலும் சிரியாவில் அமைதி உருவாக்கப்பட வேண்டும் என்று அரபு நாடுகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் மொத்தம் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.