நெல்லையில் தேமுதிக பேனர்கள் அகற்றம்: தொண்டர்கள் சாலை மறியல்
நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் அக்கட்சியினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றினர். இதைக் கண்டித்து தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 25ம் தேதி தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தேமுதிகவினர் அவரது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். வரும் 6ம் தேதி நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேமுதிக சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
நெல்லையில் நடைபெறும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக தேமுதிக சார்பில் கட்சி பேனர்கள், போர்டுகள் வைக்கப்பட்டு வந்தன. போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி போக்குவரத்து போலீசார் அவற்றை அகற்றிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தொண்டர்கள் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் இன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் விஜயகாந்த் கலந்துகொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவினர் வைத்துள்ள பேனர்களை அகற்றாத போலீசார் தங்களை மட்டும் பேனர்களை வைக்கக் கூடாது என்று கூறுவது திட்டமிட்ட சதி என்று அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.