லேப்-டாப் விற்பனையில் மோதல்: 2 பேரை கடத்திய என்ஜினீயரிங் மாணவர் கைது
சென்னை: சென்னையில் லேப்-டாப் விற்பனையில் ஏற்பட்ட தகராறில், 2 கல்லூரி மாணவர்களை கடத்தி சென்று அடித்து உதைத்த, என்ஜினீயரிங் மாணவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் உள்ள மூவரசம்பேட்டை பாரதி தெருவை சேர்ந்தவர் வித்யா சங்கர்(21), அவரது உறவினர் அசோக்குமார்(21). இருவரும் தனியார் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள். மேலும் வருமானத்திற்காக கம்ப்யூட்டர் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்கடி, காயல்பட்டினத்தை சேர்ந்தவர் நயினர் முகமது(22). வண்டலூர் உள்ள என்ஜினீயர் கல்லூரி மாணவரான இவர், வித்யா சங்கரின் நண்பராக இருந்தார். கடந்த ஆண்டு வித்யா சங்கரிடம் இருந்து லேப்-டாப் ஒன்றை ரூ.30 ஆயிரத்திற்கு, நயினார் முகமது வாங்கினார். ஆனால் அதற்கான விலையில் ரூ.10 ஆயிரம் தராமல் நயினார் முகமது இழுத்தடித்து வந்தார். இதனால் நயினார் முகமது, வித்யா சங்கர் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வித்யாசங்கரை போனில் அழைத்த நயினார் முகமது, தாம்பரம் சானடோரியம் மேம்பாலத்திற்கு கீழே வந்தால், பணம் தருவதாக தெரிவித்தார். இதை நம்பிய வித்யாசங்கர், அசோக்குமாருடன் சேர்ந்து மேம்பாலம் அருகே வந்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த நயினார் முகமது தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, வித்யாசங்கர், அசோக் குமார் ஆகிய 2 பேரையும் தாக்கி கடத்தி சென்றனர். அதன்பிறகு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து பணம் கேட்க கூடாது என்று கூறி அடித்து உதைத்ததாக தெரிகிறது.
இது குறித்து வித்யா சங்கரின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், தென்மண்டல இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர்கள் சகாதேவன், சங்கரநாராயணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர், நந்திவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடித்து வைக்கப்பட்டிருந்த வித்யா சங்கர், அசோக்குமார் ஆகிய 2 பேரையும் மீட்டனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நயினார் முகமது, அவரது நண்பர்களான கூடுவாஞ்சேரியை சேர்ந்த தமிழரசு(22), முருகவேல்(25), தனசேகரன்(27), சக்திதாசன்(28) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.