கல்வி உதவித் தொகையில் மோசடி: ஒரே நாளில் 73 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இடைநீக்கம்
நாமக்கல்: தமிழக கல்வித்துறை வரலாற்றில் ஒரே நாளில் 73 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கியதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2010-11, 2011-12 கல்வி ஆண்டுகளில் 99 பள்ளிகளுக்கு ரூ81 லட்சம் நிதி காசோலையாக வழங்கப்பட்டது. இந்தக் காசோலை வழங்குவதில் பல லட்சக்கணக்கான மோசடி நிகழ்ந்துள்ளதாக கல்வித்துறைக்கு புகார் சென்றது.
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மோசடி உண்மை எனத் தெரியவந்தது. அதாவது 36 விழுக்காடு விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியான குழந்தைகளுக்கு உரியது. மற்ற 64 விழுக்காடு குழந்தைகளின் பட்டியல் போலியாக தயாரிக்கப்பட்டு ரூ69 லட்சம் அளவுக்கு மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் பலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனிடையே மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 பேர் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் குழுவும் நேரடியாக வந்து விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 73 தலைமை ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேர் அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.