இந்திய தனியார் துறை இலங்கை துறைமுகங்களில் முதலீடு செய்யும்: ஆனந்த் சர்மா
மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த சர்மா அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா உதவும். போரில் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் குடியேற்றுவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக இந்தியா வீடு கட்டித் தருவதை இலங்கை வரவேற்றுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதில் இந்திய நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டும். இது தவிர எண்ணெய் மற்றும் எரிவாயு பகுப்பாய்விலும் இந்திய நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும்.
இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு கடன் அளிக்குமாறு இந்திய வங்கிகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும் என்றார்.
இலங்கையில் போரினால் வீடுகளை இழந்து தவிக்கும் தமிழர்களுக்காக இந்திய அரசு 50,000 வீடுகளை கட்டியுள்ளது. மேலும் போரின்போது சேதமடைந்த பல பள்ளிகளை இந்திய அரசு மறுபடியும் கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.