ஹமீது அன்சாரி 11ம் தேதி துணை ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்பு
டெல்லி: 2வது முறையாக துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஹமீது அன்சாரி வரும் 11ம் தேதி பதவியேற்கிறார்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10ம் தேதி நிறைவடைவதையடுத்து புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடந்தது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பல் போட்டியிட்ட ஹமீது அன்சாரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனாநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கைவிட 252 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் இரு அவைகளைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தனர். அதில் 736 பேர் மட்டுமே வாக்களித்தனர். மேலும் 8 பேரின் வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அன்சாரிக்கு 490 வாக்குகளும், ஜஸ்வந்த் சிங்கிற்கு 238 வாக்குகளும் கிடைத்தது. ஹமீது அன்சாரிக்கு 500க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் அவருக்கு 500 வாக்குகள் கிடைக்காதது எதிர்கட்சிகளுக்கு சற்று ஆதரவாக உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள ஹமீது அன்சாரி வரும் 11ம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் முடிந்ததையடுத்து ராஜ்யசபா துணை தலைவர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பரிந்துரைக்கும் வேட்பாளரான பி.ஜே.குரியன் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.