115 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதற ஆரம்பித்துள்ள நியூசிலாந்து எரிமலை
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் நேற்று இரவு 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து தொன்காரியோ என்ற எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டது. மேலும் எரிமலையில் இருந்து புகையும், சாம்பலும் வெளியேறியது.
1897ம் ஆண்டு தான் இந்த எரிமலை கடைசியாக வெடித்தது. இந் நிலையில், கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக மவுனமாக இருந்து வந்த இந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் எரிமலையின் அருகே வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும் அவ்வழியான விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.
எரிமலையின் அருகே புகையும், சாம்பலும் எழுந்ததாகவும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது சாம்பல் அதிகளவில் வந்து விழுந்ததாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். எரிமலையை ஓட்டி செல்லும் சாலைகளிலும் அதிக அளவில் சாம்பல் கொட்டி கிடக்கிறது. இதனால் நெடுஞ்சாலைகள் நேற்று சிறிது நேரம் முடப்பட்டன.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி அதிகாரி பீட்டர் லிச்னர் கூறியதாவது, எரிமலை எப்போது வெடித்து சிதறும் என்பது தெரியவில்லை. இது ஒரு நீண்டகால எரிமலை வெடிப்பின் ஒரு துவக்கமாக கூட இருக்கலாம். மேலும் எரிமலை இரைச்சல், புகை போன்ற சம்பவங்களுடன் அப்படியே அமைதியாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.
எரிமலையில் இருந்து புகை எழும்பியதை நேரில் பார்த்த டிரக் டிரைவர் பிரையன் ரோடா என்பவர் கூறுகையில், எரிமலையில் இருந்து மேகம் போன்ற புகை எழும்பியதை பார்த்தேன். மேலும் சிறிது நேரத்திற்கு பிறகு, புகையின் நடுவில் ஆரஞ்சு நிறத்திலான தீ வெளிப்பட்டது என்றார்.
தொன்காரிரோ எரிமலையில் ஏற்பட்டு வரும் இயற்கை மாற்றம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அப்பகுதியினர், பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.