மழைகால கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா தாக்கல்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: தற்போது நடைபெற்று வரும் மழைகால கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. நேற்று 2 அவைகளும் கூடிய உடனே அஸ்ஸாம் வன்முறை குறித்து அமளி ஏற்பட்டு காலையில் எந்த பணிகளும் நடக்காமல் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகலி்ல் தான் அஸ்ஸாம் வன்முறை குறித்து லோக்சபாவில் விவாதம் நடந்தது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரிலேயே ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா ராஜ்சபாவில் தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை செப்டம்பர் மாதம் 3ம் தேதிக்குள் சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கையை சமர்பி்த்துவிட்டால் நாங்கள் மசோதாவை நிறைவேற்றுவோம் என்றார்.
லோக்பால் மசோதா கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரின்போது லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், அதில் சில மாற்றங்கள் செய்ய கோரிக்கைகள் எழுந்ததாலும் ராஜ்சபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.
லோக்பால் மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவருவது பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு சட்ட அமைச்சகம், சிபிஐ உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டுள்ளது.