கட்டிடம் இடிந்து 10 பேர் பலியான சம்பவம்-ஜேப்பியார் கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் கிராமத்தில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி வளாகத்தில் கூடைபந்து விளையாட்டு அரங்கு கட்டும் பணி நடந்து வந்தது.
கடந்த 6ம் தேதி இந்த விளையாட்டு அரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் வெளி மாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 304 மற்றும் 308ன் கீழ் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் கல்லூரி இயக்குனர் மரிய வில்சன் (34), நாகர்கோவில் பொறியாளர்கள், அருள் ஜெய அப்ரோஸ் (28), ராஜ்குமார் (28), குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சுதானந்தன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந் நிலையில் கல்லூரியின் தலைவரான ஜேப்பியாரை இன்று அதிகாலை கைது செய்தனர்.
சென்னை எழும்பூரில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவரை மருத்துவமனையிலேயே வைத்து போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜேப்பியாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரது உடல் நிலை கருதி மருத்துவமனையிலேயே காவலில் வைத்திருந்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் ஜேப்பியார் சிகிச்சை பெற்று வருகிறார்.
தரமற்ற, குறைவான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி, ஸ்திரத்தன்மைக்கு தேவையான கால அவகாசம் தராமல், தொடர்ந்து கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க முயன்றதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் ஜேப்பியார் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் மருத்துவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு நோயால் ஜேப்பியார் அவதிப்பட்டு வருகிறார், அதற்காக எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பயணம் செய்ய முடியாத அளவில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஜேப்பியார் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.