கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்கள் விவரத்தைத் தந்த செக் குடியரசு, பின்லாந்து
இது தொடர்பான சிடிக்களை தங்களது தூதரகங்கள் மூலமாக மத்திய அரசிடம் இந்த நாடுகள் ஒப்படைத்துள்ளன. அதில் ஏராளமான கோடிகளை பின்லாந்திலும் செக் நாட்டிலும் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் அடங்கியுள்ளன.
ஆனால், இதில் உள்ள பல பெயர்கள் பினாமிகள் என்று தெரியவந்துள்ளன. இவர்கள் மூலமாக பணத்தை பதுக்கி வைத்துள்ள உண்மையான நபர்கள் குறித்து தகவல் சேகரிக்க வருமான வரித்துறை முயன்று வருகிறது.
இதுவரை இந்தியாவிடம் ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், தென் கோரியா, டென்மார்க் உள்ளிட்ட 24 நாடுகள் கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களைத் தந்தன. இப்போது மேலும் இரு நாடுகள் இந்த விவரத்தை ஒப்படைத்துள்ளன.
ஆனால், பெரும்பாலான கறுப்புப் பணம் குவிந்துள்ள ஸ்விஸ் நாடு, இந்தியர்களின் விவரத்தை தர தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஜெர்மனியின் Liechtenstein வங்கியில் 26 இந்தியர்கள் ரூ. 45 கோடி வரை முறைகேடாக பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ. 45 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுவிட்டது.
ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் 700 இந்தியர்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது. இந்த விவரம் பிரான்ஸ் அரசு தகவல் மூலம் கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தப் பணத்தை பதுக்கி வைத்திருப்பது டெல்லி, மும்பை, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்பது தெரியவந்துள்ளது.