சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை
சந்திரனை பார்த்து கதை சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கா முதன்முதலில் சந்திரனுக்கு 3 விண்வெளி வீரர்களை ராக்கெட்டில் அனுப்பி வைத்தது அதில் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் ஒருவர். 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதன் ஆளாக இறங்கி நிலவில் காலடி எடுத்து வைத்தார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலில் நடந்த விண்வெளி வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் நாசாவில் தொடர்ந்து விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மனைவி கரோலினுடன் வசித்து வரும் 82 வயதாகும் ஆம்ஸ்ட்ராங்குக்கு சமீபத்தில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாசா விண்வெளி மைய மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது நலமாக உள்ளதாக அருகில் இருந்து கவனித்து வரும் அவரது மனைவி தெரிவித்தார்.
நாசா மையமும் அவரது உடல் நிலையில் முழு கவனம் செலுத்தி வருகிறது. நீல் ஆம்ஸ்ட்ராங் உண்மையான அமெரிக்க ஹீரோ, அவர் சவாலான கால கட்டத்தில் துடிப்புடன் செயல்பட்டார். நாசா விண்வெளி மைய குடும்பத்தினர் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் கூறியுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ராங்கின் 82 வது பிறந்தநாள் கடந்த ஞாயிறுக்கிழமை கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.