26/11 தாக்குதல்: சிறையில் ஜிண்டாலை அடையாளம் காட்டிய கசாப்
26/11 தாக்குதல் வழக்கில் கைதான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2008ம் ஆண்டு முதல் மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள சிறையில் சிறப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் இந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டால் டெல்லி போலீசாரிடம் சிக்கினான். இதையடுத்து கசாப் மற்றும் ஜிண்டாலை ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு மகாராஷ்டிரா அரசை மும்பை கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு மாநில அரசு அனுமதி அளித்ததையடுத்து ஜிண்டால் ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு வரப்பட்டான். அங்கு கசாபும், ஜிண்டாலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஜிண்டாலைப் பார்த்ததும் கசாப் அடையாளம் கண்டு கொண்டான். மேலும் மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஜிண்டாலும் ஒருவன் என்று போலீசாரிடம் தெரிவித்தான்.
இதையடுத்து அவர்கள் இருவரிடமும் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஜிண்டால் கசாபுக்கு தீவிரவாத பயிற்சி அளித்தவன் என்று நம்பப்படுகிறது.