வானிலிருந்து பாராசூட்டில் 'குதித்த' கரடி பொம்மைகள்: இரு நாடுகள் மோதல்!
முன்னாள் சோவியக் குடியரசு நாடான பெலாரஸ் நாட்டில் மனித உரிமைகளும், பேச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்டு வருகிறது.
இதைக் கண்டித்தும், அதிபர் அலெக்ஸாண்டர் லுகாசென்கோவின் ஆட்சியை விமர்சித்தும் பேசிய பலரும் கைது செய்யப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் வருகின்றனர்.
இந் நிலையில் சுவீடனைச் சேர்ந்த ஒரு மனித உரிமை அமைப்பு சிறிய விமானம் பெலாரஸ் நாட்டு வான் பகுதியில் ஊடுருவி நூற்றுக்கணக்கான கரடி பொம்மைகளை பெலாரஸ் நாடு முழுவதும் கடந்த மாதம் வீசியது.
அந்த பொம்மைகளின் கழுத்தில் பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன. அதில், அதிபர் அலெக்ஸாண்டருக்கு எதிரான வாசகங்களும், பேச்சுரிமை கோரும் வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து அந்த மனித உரிமை அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுவீடன் நாட்டிடம் பெலாரஸ் கோரியது. அதை சுவீடன் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து தனது தூதரையும் தூதரக ஊழியர்களை பெலாரஸ் வாபஸ் பெற்றுள்ளது. அதே போல பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள தனது தூதரக ஊழியர்களையும் சுவீடன் திரும்பப் பெற வேண்டும் என அலெக்ஸாண்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சுவீடன் தூதர் வாபஸ் பெறப்பட்டுவிட்டது குறிப்பித்தக்கது.
மேலும் விமான ஊடுருவலைத் தடுக்காமல் விட்ட விமானப் படை அதிகாரிகளையும் அலெக்ஸாண்டர் நீக்கியுள்ளார்.
பெலாரஸ் நாட்டில் ஜனநாயகம் கோரி நெருக்கடி கொடுத்து வரும் முக்கிய நாடு சுவீடன் என்பது குறிப்பிடத்தக்கது.