தக்க சமயத்தில் கல்லீரல் தானம் கிடைக்காததாலேயே தேஷ்முக் இறந்தார்: டாக்டர் பேட்டி
கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தது. ஆனால் தக்க சமயத்தில் கல்லீரல் கிடைக்காததால் அவர் நேற்று மரணம் அடைந்தார்.
இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில்,
கல்லீரல் கோளாறு காரணமாக கடந்த 6ம் தேதி எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு கல்லீரல் பிரிவு சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு மரணம் அடைந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருடையை உடல் நிலை சற்று தேறியபோதும் அவருடைய கல்லீரல் செயல்பாடு மோசமாக இருந்தது. அதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த டிரைவர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெறுவதாக இருந்தது. ஆனால் அதை வாங்க நாங்கள் அரசு பொது மருத்துவமனைக்கு செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார்.
அதே சமயம் தேஷ்முக்கின் உடல் நிலை மோசமானது. குறிப்பாக ரத்த அழுத்தமும், ஆக்சிஜன் அளவும் குறைந்ததால் அவர் இறந்தார். தமிழகம் தவிர குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் அவருக்கு கல்லீரல் கிடைப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் அவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் எங்களுக்கு ஆலோசனை வழங்கி உதவிகள் செய்தாலும் அவருக்கு பொருத்தமான கல்லீரல் தக்க சமயத்தில் கிடைக்காமல் போனது. அவருடைய மரணம் அனைவருக்கும் ஒரு பாடம். இனியாவது உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை சமுதாயத்திற்கு எடுத்துக் கூறுங்கள்.
மேற்கத்திய நாடுகளில் கல்லீரல் போன்று உறுப்புகள் உடனுக்குடன் கிடைக்கும். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை. உடல் உறுப்பு தானம் குறைந்த அளவில் செய்யப்படுவதே அதற்கு காரணம். இருப்பினும் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
தேஷ்முக்கின் மறைவால் நாம் ஒரு சிறந்த தலைவரையும், மனிதநேயமுள்ள மனிதரையும் இழந்துவிட்டோம். அவருடைய குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.