கபிலவஸ்துவில் உள்ள புத்தரின் எலும்புகள் இலங்கைக்கு பயணம்: தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு
மன்னர் பரம்பரையில் தோன்றி மகானாக உயர்ந்தவர் கவுதம புத்தர். ஆசையே துன்பங்களுக்குக் காரணம் ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம் என்று அறிவுறுத்தியவர். புத்தர் தோற்றுவித்த புத்தமதம் உலகிலேயே பழமையானது. இது இந்தியாவில் தோன்றினாலும் சீனா, ஜப்பான், மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில்பரவியுள்ளது. சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மன்னர் பரம்பரையில் பிறந்தாலும் வாழ்வின் இன்பங்களை துறந்து கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார். மரணத்திற்கு பின் புத்தரின் உடல் கபிலவஸ்து (தற்போதைய பீகார் மாநிலம்) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த இடத்தை புத்த மதத்தினர் புனித இடமாக வழிபட்டு வருகிறார்கள்.
இதனிடையே புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வந்திருந்தபோது பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் செல்ஜா, இலங்கைக்கு சென்று புத்தரின் எலும்புகளை ஒப்படைக்கிறார். ஞாயிறன்று இலங்கையில் தொடங்க உள்ள கண்காட்சியில் புத்தரின் எலும்புகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
அதேசமயம் புத்தரின் எலும்புகளை ஒப்படைப்பதற்கு இலங்கை தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஒருவர் புத்தரின் எலும்புகளை ஒப்படைக்க இலங்கைக்கு செல்வதை ம.தி.மு.க. தலைவர் வைகோவும் எதிர்த்துள்ளார். இதை தடை செய்யவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.