இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை கோரி பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம்
சென்னை : மதத்தின் பெயரால் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்ட வேண்டாம் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படுவதை போல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தி சென்னை அருகே மறைமலை நகரில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் 3 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த போராட்டத்திற்கு தலைமையேற்று பேசிய கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மதத்தின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை அளித்தால் இளம் பிஞ்சுகளான மாணவர்களின் மனதில் வெறுப்புணர்வுதான் வளரும்.
ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக கல்வி உதவித் தொகை மறுக்கப்பட்டால் மாணவர்களிடம் மத வெறிதான் வளரும்.
மாணவர்களிடம் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காகவே சீருடை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது அரசாங்கமே பிரிவினையை வளர்த்து வருகிறது. மதத்தின் அடிப்படையில் மாணவர்களைப் பிரிக்க வேண்டாம். ஓட்டு வங்கி அரசியலுக்காக மத அடிப்படையில் சலுகைகளை வழங்கும் காங்கிரஸ் தங்களை மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்கிறது.
இந்து ஏழை மாணவர்களுக்கும் காங்கிரஸ் அரசு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக வழங்கப்படும் என்றார்.
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், சிறுபான்மை மாணவர்களுக்கு 2011-12ம் ஆண்டு 4 லட்சம் மாணவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 5 லட்சத்து 25 ஆயிரத்து 624 மாணவர்களுக்கு ரூ.228 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 15,342 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 34,107 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.
இவ்வாறு சிறுபான்மை மாணவர்கள் மட்டும் கல்வி உதவி தொகை வழங்கி மாணவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தும் போக்கை காங்கிரஸ் அரசு கையாண்டு வருகிறது. இதனால் கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத்தியில் பிரிவினையும், மதமோதல்களும் ஏற்படுவதுடன் மதமாற்றும் இடங்களாகவும் கல்வி நிறுவனங்கள் மாறி வரும் போக்கிற்கு காங்கிரஸ் அரசு உறுதுணையாக இருக்கிறது என்றார்.