அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும்- குடியரசு தலைவர் பிரணாப் முகர்
லண்டன் ஒலிம்பிக் போட்டியி்ல் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சுஷில் குமார், யோகேஷ்வர் தத், மேரி கோம், விஜய்குமார், சாய்னா நேவால், ககன் நரங் ஆகிய 6 பேர் பதக்கங்களை வென்றனர்.
லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு விழாக்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற 6 வீரர்கள், வீராங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் குடியரசு தலைவர்.
அதன்பிறகு கூட்டத்தில் பேசிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற நாம், இனி ஓய்வெடுக்க நேரம் இல்லை. விளையாட்டு துறையில் நாட்டின் புகழை அதிகரிக்க ஒருமித்து செயல்பட வேண்டும். விளையாட்டு துறையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் பணி, வீரர்கள், வீராங்கனைகளின் மட்டும் இல்லை. அது நாட்டின் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.
ஒரு நாட்டில் சிறப்பான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே, அந்த நாடு சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். எனவே நம் நாட்டில் விளையாட்டு துறையில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிய வேண்டும்.
அதன்மூலம் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை பெற முடியும் என்று நம்புகிறேன். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகும் பணிகளை இன்றே துவங்க வேண்டும். உயரான இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்.
இதற்காக விடாமுயற்சியும், உறுதியான மனநிலையும் தேவை. இந்தியர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால், விளையாட்டு துறையில் முன்னணி நாடாக உருவாகும் என்று நம்புகிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதில் பின்வரிசையில் இருந்தது. ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்கள் வென்று முன்னேறி உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைத்து இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளையும் பாராட்டுகிறேன். பதக்கம் வென்றவர்களை மட்டுமின்றி, அதற்காக முயன்ற இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.