முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்: வீட்டு கதவை உடைத்து கத்தி காட்டி 410 பவுன் நகைகள் கொள்ளை
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் நகை வியாபாரியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த 6 முகமூடி கொள்ளையர், கத்தி காட்டி மிரட்டி 410 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். நகை கடை லாக்கரை உடைக்க முடியாமல் போனதால் 600 பவுன் தங்க நகைகள் தப்பியது.
நாகை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த மேலமுக்கூட்டு பகுதியை சேர்ந்தவர் அருணாசலம்(70). தனது வீட்டின் முன்பகுதியில் நகை கடை மற்றும் வட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 19ம் தேதி இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, அருணாசலம் வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் அருணாசலத்தின் வீட்டின் பின்புற கதவில் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து அருணாசலம் அங்கு சென்று பார்த்த போது, 6 முகமூடி கொள்ளையர்கள் கதவை உடைத்து வீட்டிற்கு நுழைந்திருந்தனர்.
அதன்பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கத்தி காட்டி மிரட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்தனர். வீட்டில் இருந்த அருணாசலத்தின் பேரன் அனீஸ்(3) என்ற குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளையர்கள், வீட்டில் உள்ள நகை, பணம் அனைத்தையும் தருமாறு கேட்டனர். மேலும் அருணாசலத்தின் குடும்பத்தினரை அடித்து உதைத்தனர்.
இதில் பயந்து போன குடும்பத்தினர், அவரவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்தனர். மேலும் வீட்டில் இருந்த 2 பீரோவில் பத்திரப்படுத்தி வைத்திருந்த நகைகளையும் எடுத்து கொடுத்தனர். இதில் 185 பவுன் தங்க நகைகள் இருந்தது. அருணாச்சலத்தின் மனைவி சாவித்திரி அணிந்திருந்த தாலியை மட்டும், கொள்ளையர்கள் பெற்று கொள்ளவில்லை.
வீட்டில் கொள்ளையை முடித்த கொள்ளையர்கள், நகை கடையிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். நகை கடையில் இருந்த கடையில் இருந்த 225 பவுன் நகைகளை எடுத்து, ஒரு துணியில் மூட்டையாக கட்டிக் கொண்டனர்.
இதன்பிறகு நகை கடையில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைத்து அதிலிருந்த நகைகளை கொள்ளையிட முயன்றனர். ஆனால் லாக்கரை உடைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், லாக்கரில் இருந்த 600 பவுன் நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது.
அருணாசலத்தின் வீட்டில் இருந்து மொத்தம் 410 பவுன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், குழந்தை அனீஸை சிறிது தூரம் தூக்கி சென்ற பிறகு, குழந்தையை கீழே இறக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய 6 முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.