இந்தியாவுக்கு 3 முறை அணு ஆயுத மிரட்டல்கள் வந்தன: சிவசங்கர் மேனன்
டெல்லியில் நடைபெற்ற அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
1998-ம் ஆண்டுக்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நாடுகள் மிரட்டி, அரசியல் ரீதியாக அவர்களுக்கு உடன்படச் செய்ய முயற்சித்தன. ஆனால் இந்திய அரசியல் தலைமை உறுதியுடன் இருந்ததால், அந்த நாடுகளின் நோக்கம் நிறைவேறவில்லை. 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுதம் வைத்துள்ள நாடாக பகிரங்கமாக அறிவித்ததும் நமக்கெதிராக வந்து கொண்டிருந்த மறைமுக மிரட்டல்கள் நின்றுவிட்டன.
நிச்சயத்தன்மையற்ற, குழப்பம் நிறைந்த உலக அரசியல் சூழலில் அணு ஆயுதங்கள் நமக்குப் பாதுகாப்பு அளிப்பதில் உறுதுணையாக இருந்து வருகின்றன. பிற நாடுகள் வைத்துள்ள அணு ஆயுதங்களைக் காட்டி நம்மை மிரட்டுவதையும் பணிய வைக்க முயற்சிப்பதையும் கைவிட செய்துள்ளன. இந்தியா ஒரு அணு ஆயுத நாடு என வெளிப்படையாக அறிவித்ததன் நோக்கம் அந்த அளவில் வெற்றி அடைந்திருக்கிறது . இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்கள் போரில் பயன்படுத்துவதற்கு அல்ல. மற்ற நாடுகள் நம் மீது அவ்வகை ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் தடுக்கவே நாம் அணு ஆயுதங்கள் உருவாக்கியுள்ளோம் என இந்தியா மிகத் தெளிவாக கூறி வந்திருக்கிறது
1974-ம் ஆண்டு நாம் அணு குண்டு சோதனை நடத்தி வெற்றி பெற்றபோதிலும், அந்த வகை ஆயுதங்கள் இல்லாத அமைதி நிறைந்த உலகம் வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தள்ளது. 2010-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, உலகில் அணு ஆயுதங்களே இல்லாத நிலையை அடைய வேண்டுமென்று பேசினார். அப்படியொரு உலக அமைதி நிலையை அடையும்வரை, பிற தேசங்களின் அச்சுறுத்தலிலிருந்து நம் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றார் அவர்.