ஹிட்லர் மூழ்கடித்த இங்கிலாந்து கப்பலின் மணியை மீட்க கப்பல் அனுப்பிய மைக்ரோசாப்ட் நிறுவனர்
71 ஆண்டுகளுக்கு முன், 1941ம் ஆண்டில் மே மாதம் 24ம் தேதி, கிரீன்லாந்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நடந்த தாக்குதலில் இங்கிலாந்தின் எச்எம்எஸ் ஹூட் என்ற போர்க் கப்பலை ஜெர்மனி கடற்படையின் பிஸ்மார்க் என்ற கப்பல் தாக்கி மூழ்கடித்ததில் அதிலிருந்த 1,400 இங்கிலாந்து வீரர்கள் பலியாயினர். 3 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
இதுவரை இங்கிலாந்தின் கடற்படை வரலாற்றில் நடந்த மாபெரும் தோல்வி இது தான். இதையடுத்து அடுத்த 6 நாட்களில் பிஸ்மார்க் கப்பலை இங்கிலாந்து கடற்படை தாக்கி மூழ்கடித்தது தனிக்கதை.
இப்போது எச்எம்எஸ் ஹூட் கப்பலின் மணியை தேடிப் பிடித்து மீட்க தனக்குச் சொந்தமான சொகுசு கப்பலை அனுப்பியுள்ளார் ஆலன்.
இரு ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், பேஸ்கட் பால் கோர்ட், நைட் கிளப், ரெக்கார்டிங் தியேட்டர் ஆகியவை கொண்டது ஆலனின் இந்த பிரமாண்டக் கப்பல். ஆக்டோபஸ் என்ற இந்தக் கப்பல் இப்போது பல நீர்மூழ்கிக் கருவிகளுடன் மணியைத் தேடி வட அட்லாண்டிக் கடலில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தப் பணியில் அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் சீல் படை வீரர்களையும் களமிறக்கியுள்ளார் ஆலன்.
அட்லாண்டிக் கடலுக்கடியில் சுமார் இரண்டரை கி.மீ. பரப்பில் வெடித்து சிதறிக் கிடக்கின்றன இந்தக் கப்பலின் பாகங்கள். கடந்த 2001ம் ஆண்டு இந்தக் கப்பலின் பாகங்களை டெவிட் மியர்ன்ஸ் என்பவர் அனுப்பிய நீர்மூழ்கிக் கருவி கண்டுபிடித்தது. அப்போது இந்தக் கப்பலின் மணி சேதமடையாமல் பத்திரமாக இருப்பது தெரியவந்தது.
ஆனால், அவரால் அதை மீட்க முடியவில்லை. இப்போது அந்தப் பணியைத் தான் ஆலன் மேற்கொண்டுள்ளார்.
பால் ஆலனும் முன்பு மிகச் சிறந்த நீர்மூழ்கி வீரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.