தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் கேட்பாரின்றி கிடக்கும் ரூ.752 கோடி: கபில் சிபல்
டெல்லி: நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளில் கேட்பாரின்றி ரூ.752 கோடி இருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் உறுப்பினர் ஒருவர் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்கு பற்றி கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கான பதிலை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் எழுத்துப்பூர்வமாக அளித்தார்.
அந்த பதிலில் கூறியிருப்பதாவது,
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி கணக்குப்படி நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குளில் கேட்பாரின்றி இருக்கும் 2,49,59,446 கணக்குகளில் ரூ. 752,44,57,414.03 உள்ளது. அந்த கணக்குகளுக்கு சொந்தக்காரர்கள் அவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்ச பணம் இல்லாத கணக்குகளின் சொந்தக்காரர்களுக்கு ஆண்டுதோறும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி கேட்பாரின்றி இருக்கும் சேமிப்பு கணக்குகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், உத்தர பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மேற்கு வங்கத்தில் 20.16 லட்சம் சேமிப்பு கணக்குகளில் ரூ.107 கோடியும், தமிழகத்தில் 62.72 லட்சம் கணக்குகளில் ரூ.105.87 கோடியும், உத்தர பிரதேசத்தில் 21.74 லட்சம் கணக்குகளில் ரூ.68.61 கோடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.