மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மி்ன்வெட்டு: தூக்கத்தை தொலைத்த மக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மீண்டும் அதிரடியாக மின்வெட்டு நேரம் வரைமுறையின்றி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் தி்முக ஆட்சியை அகற்றிட மின்வெட்டும் ஒரு காரணமாக இருந்தது. இந்த மின்வெட்டு பிரச்சனை தற்போது பூதாகரம் எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 12 மணி நேரம் இருந்த மின்வெட்டு படிப்படியாக குறைந்து 2 மணி நேரமானது. பகலில் மட்டுமே மின்வெட்டு செய்து இரவில் கொசுக் கடியில் இருந்தும், கோடை வெயிலில் இருந்தும் தப்பிக்க வழியிலிருந்த நிலை தற்போது மாறி மீண்டும் மின்சார வாரியம் முன் அறிவிப்பு இல்லாத அதிரடி மின்வெட்டை அறிமுகம் செய்து வருகின்றது.
மாவட்டத்தின் சில பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும், நள்ளிரவு 11 மணி முதல் 12 மணி வரையிலும், அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரையிலும், அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையிலும் என தினமும் 7 முதல் 12 மணி நேரம் வரை மி்ன்வெட்டு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் மழை இல்லாமல் வறட்சி ஒருபக்கம் இருந்து வரும் நிலையில் தற்போது அதிகரித்து வரும் மின்வெட்டால் மக்கள் நிம்மதியை தொலைத்து கொசுக்கடியால் நோயாளிகளாக மாறி வரும் அவலத்திற்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மரத்தடிக்களை அறுக்கும் நிலையங்கள், அரிசி ஆலைகள் என ஏராளமான சிறு தொழிற்சாலைகள் மின்வெட்டு காரணமாக முடங்கும் அபாயமும், தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.