கல்வி உதவித் தொகை வேண்டுமா? இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்
நெல்லை: பிளஸ் 1, பிளஸ் டூ மாணவ, மாணவிகள் கல்வித் உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பி்ளஸ் 1, பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மாணவர்கள் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து மீண்டும் பள்ளிகளில் வழங்க வேண்டும். அந்த படிவங்களை பின்னர் மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் மிகுந்த தாமதம் ஏற்பட்டது.
இதை தவிர்க்க தற்போது அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவித் தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூ், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.12.58 கோடி மதிப்பீ்ட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக நெல்லையில் உயர் நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கு முன்பு உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதா, பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியாது. பள்ளிகளிலும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்த புதியதிட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக 19 இலக்க எண் வழங்கபட உள்ளது. இந்த 19 இலக்க எண்ணை பதிவு செய்து மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவரே விண்ணப்பத்தின் நிலவரம், உதவித்தொகையின் நிலவரம் ஆகியவற்றை பிரத்யேக எண் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த புதிய திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் அமலுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.