வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவுக்கு 69 சிறப்பு ரயில்கள்: டி. ஆர். பாலு தகவல்
டெல்லி: மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு 69 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் மிக முக்கியமானது வேளாங்கண்ணி மாதா கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு திருவிழா வரும் 29ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. பக்தர்களின் வசதி கருதி வேளாங்கண்ணிக்கு 69 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜூலை 31ம் தேதி வேளாங்கண்ணியில் நாடாளுமன்ற நிலைக்குழு (ரயில்வே) கூட்டம் நடைபெற்றது. அப்போது வேளாங்கண்ணி விழாவுக்கு அதிக அளவு ரயில் சேவை தேவை என்று வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து சென்னை, தாதர், மும்பை, திப்ரூகர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய இடங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு 69 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது வேளாங்கண்ணி விழாவுக்கு செல்லும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.