தென்னிந்தியாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு: தமிழகத்தில் மட்டும் 69 காலியிடங்கள்
டெல்லி: தென்னிந்தியாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுமார் 23 சதவீதம் ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தியாவில் மொத்தம் 6,154 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்க வேண்டும். அதில் 1,407 பேர் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஒரிசா மற்றும் ஆந்திரா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களில் இருக்க வேண்டும். ஆனால் 1,407 பேருக்கு பதில் 1,095 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமே தென்னிந்தியாவில் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் 355 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது வெறும் 286 பேர் மட்டும் பணியாற்றுவதால் 69 இடங்கள் காலியாக உள்ளன. 376 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்க வேண்டிய ஆந்திர மாநிலத்தில் 284 பேர் மட்டுமே உள்ளனர்.
இது தவிர 214 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்ற வேண்டிய கேரளாவில் வெறும் 158 அதிகாரிகளே உள்ளனர். மேலும் 299 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்க வேண்டிய கர்நாடகத்தில் 219 பேரும், 226 பேர் பணியாற்ற வேண்டிய ஒரிசாவில் 148 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இதனால் தென்னிந்தியாவில் 23 சதவீத ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.