மதுரை இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணலை நெல்லையில் நடத்திய மு.க. ஸ்டாலின்
திமுக இளைஞரணிக்கு நிர்வாகிகளைத் தேர்வும் செய்யும் பணியில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டுள்ளனர். அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தி தானே நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார்.
மத்திய அமைச்சரும், ஸ்டாலினின் சகோதரருமான மு.க. அழகிரி இருக்கும் மதுரை பகுதி நிர்வாகிகளுக்கான நேர்காணலை அங்கே நடத்தாமல் நெல்லையில் நடத்தியுள்ளனர்.
மதுரையில் இந்தக் கூட்டத்தை நடத்த முடியாத நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது.
மதுரை, தூத்துக்குடி மாநகர பகுதி திமுக இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் நேர்காணல் பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள வி.எம்.எஸ். மகாலில் நேற்று நடந்தது. மு.க. ஸ்டாலின், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், சுகவனம் எம்.பி., தங்கவேல் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். தூத்துக்குடி மாநகரைச் சேர்ந்த 100 பேருக்கும், மதுரை மாநகரைச் சேர்ந்த 150 பேருக்கும் நேர்காணல் நடந்தது.
அதன் பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணிக்கான நேர்காணல் முடிந்துவிட்டது. வேலூர் மாநகரத்தில் மட்டும் நடந்த வேண்டியுள்ளது. அங்கு செப்டம்பர் மாதம் 2ம் தேதி நேர்காணல் நடத்தப்படும். தொடர்ந்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தேர்வு சென்னையில் நடத்தப்படும். இதற்கான
விண்ணப்பங்கள் தற்போது வந்துள்ளன. தலைமையின் அனுமதி பெற்று விரைவில் இளைஞரணி 2வது மாநில மாநாடு நடத்தப்படும் என்றார்.
முன்னதாக புன்னைகாயலைச் சேர்ந்த மாலுமி டனிஸ்டன் சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதால் அவரை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினர் ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.