மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் துப்பாக்கி, ஆயுதங்களுடன் சிக்கிய 6 பேர்
தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை மேற்குத் தொடர்ச்சி மலை சுமார் 400 கிமீ தூரம் பரந்து விரிந்துள்ளது. இம்மலைப்பகுதியை ஒட்டியுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து தமிழக அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நக்சலைட் கும்பல் தலைவன் விவேக்கை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த பெண் தப்பியோடிவிட்டார். பிடிப்பட்ட நக்சலைட் தீவிரவாதியும், தப்பியோடிய பெண்ணும் தேனி மாவட்டத்தில் உள்ள முருகமலையில் நக்லைட்டுகளுக்கு பயிற்சி அளித்தது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக அதிரடிப்படையினர் ஒரு சப்இன்ஸ்பெடர் தலைமையில் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்சல் கும்பல் நடமாட்டம் உள்ளதா என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக வனப்பகுதியில் 15 நக்சலைட்டுகள் நீலகிரி வனப்பகுதி வழியாக ஊடுருவி இருப்பதாக உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்தியமங்கலம், தேனி, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வனச்சரக அலுவலர் கருமலையான் தலைமையில் வனக்காப்பாளர்கள் சின்னசாமி, ஜெய்சங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சதுரகிரி மலை அடிவாரத்தில் ரோந்து சென்றனர். வாழைதோப்பு பாலம் அருகே நளளிரவில் ஒரு கார் நிற்பதை பார்த்தனர். அந்த காரை சுற்றி வளைத்து அதில் இருந்த 6 பேரை பிடித்து விசாரித்த போது மதுரையில் நடந்த துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்கு வந்ததாகவும், காரை நிறுத்தி சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினர். வனத்துறையினர் காரை சோதனை போட்டபோது 2 துப்பாக்கி, 24 தோட்டாக்கள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுதது அவர்கள் பேரையூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட வந்தவர்களா, அல்லது நக்சலைட்டுகளுடன் தொடர்புடையவர்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.