பெங்களூரில் வீடுகளை உடைத்து 1 கிலோ நகைகளை கொள்ளையடித்த 3 குப்பை பொறுக்கும் பெண்கள்!
பெங்களூர்: பெங்களூரில் பூட்டிய வீடுகளை உடைத்து நகை, பணத்தைத் திருடிய 3 குப்பை பொறுக்கும் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், வைரம் என்று தெரியாமல் சதாராண கற்கள் என்று நினைத்து பல வைரக் கற்களை இவர்கள் சாக்கடையில் வீசியுள்ளதும் தெரியவந்துள்ளது.
பன்னரகட்டா ரோடு கோத்திகெரே பகுதியைச் சேர்ந்த அம்மாயம்மா (30), கோலிபாரம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி (30), கனகபுராவைச் சேர்ந்த காந்தம்மா ஆகியோர் பனசங்கரி, விஜயநகர், தியாகராஜ்நகர் ஆகிய பகுதிகளில் குப்பை பொறுக்குவோரைப் போலச் சென்று பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இதுவரை 5 வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். இதில் வைரக் கற்களும் அடக்கம்.
குப்பை பொறுக்க வந்ததது போல சாலைகளில் திரிந்தபடி பூட்டியிருக்கும் வீட்டை முதலில் அடையாளம் பார்த்துவிட்டு, பின்னர் வீட்டின் பின் கதவை இரும்புக் கம்பிகளால் உடைத்துத் திறந்து கொள்ளையடித்து வந்துள்ளனர் இந்தப் பெண்கள்.
சமீபத்தில் இவர்களை ஜெயநகர் பகுதியில் வைத்து உளவுப் பிரிவு போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது இவர்கள் மீது சந்தேகம் வரவே காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரித்தபோது தான் நகை திருட்டை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து இவர்களது வீடுகளுக்கு விரைந்த போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது ரூ. 40 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கிடைத்தன. வெள்ளிப் பொருட்களும் சிக்கின. ஆனால், வைரக் கற்கள் கிடைக்கவில்லை.
வீடுகளில் திருடப்பட்ட வைரக் கற்களை என்ன செய்தீர்கள் என்று விசாரித்தபோது, அவை வைரம் என்று தெரியாமல் சாக்கடையிலும் தெருவிலும் வீசிவிட்டதாகக் கூறியுள்ளனர்.