அமெரிக்க அதிபர் தேர்தல்- குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 2வது முறையாக போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அதிபர் பராக் ஒபாமாவை எதிர்த்து அவர் தீவிரக் களம் காணவுள்ளார்.
முன்னாள் மாசசூசட்ஸ் மாகாண ஆளுநரான மிட் ரோம்னியை குடியரசுக் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து ரோம்னி போட்டியிடுகிறார்.
வேட்பாளராக தேவைப்பட்ட 1,144 பிரதிநிதிகள் வாக்குகளை மிட் ரோம்னி பெற்றார். இதையடுத்து புளோரிடா மாகாணம், தம்பாவில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மேலும் துணை அதிபர் வேட்பாளராக பால் ரியான் அறிவிக்கப்பட்டார்.
நாளை ஏற்புரை நிகழ்த்தவுள்ளார் ரோம்னி. அதன் பின்னர் அவரது வேட்பாளர் அறிவிப்பு முறைப்படி நடைமுறைக்கு வரும்.
ரோம்னிக்கு 65 வயதாகிறது. பராக் ஒபாமாவும், ரோம்னியும் சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் கிட்டத்தட்ட சம பலத்துடன் இருப்பதாக தெரிய வந்திருப்பதால் இவர்களின் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.