ஷீரடி சாய்பாபா கோவிலில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 6,000 கிலோ ஊசிப்போன லட்டுகள் அகற்றம்
ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த ரூ.8.15 லட்சம் மதிப்புள்ள 6,796 கிலோ லட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ஷீரடியில் உள்ளது பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில். இந்த கோவிலுக்கு இந்தியா தவிர வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கடந்த 25ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. அந்த லட்டை உண்ட பக்தர்கள் அதில் இருந்து ஊசிப்போன வாடை வருகிறது என்றும், சுவை நன்றாக இல்லை என்றும் புகார் செய்தனர்.
நெய்யில் தான் ஏதோ கோளாறு என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் டிரஸ்ட் உறுப்பினர்கள் மாவட்ட நீதிபதி ஜெயந்த் குல்கர்னி, கலெக்டர் சஞ்சீவ் குமார் ஆகியோரும் அந்த லட்டை உண்டுவிட்டு அது கெட்டுப்போனதை உறுதி செய்தனர். இதையடுத்து நெய் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு உணவு மற்றும் மருந்து நிர்வாக குழு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ரூ.8.15 லட்சம் மதிப்புள்ள 6,796 கிலோ லட்டுகளை அருகில் உள்ல ஒரு பள்ளத்தில் போட்டனர் என்று கூறப்படுகிறது.
மேலும் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.