குஜராத்தில் நடுவானில் மோதி சிதறிய 2 இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்- 9 வீரர்கள் பலி
விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகர் தளத்தில் இருந்து இன்று பயிற்சிக்காகப் புறப்பட்டன.
பகல் 12.25 மணியளவில் ஜாம்நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சர்மத் கிராமத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென இரு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டன.
பின்னால் சென்ற ஹெலிகாப்டரின் இறக்கையும் முன்னாள் சென்ற ஹெலிகாப்டரின் பின் பகுதியும் மோதிக் கொண்டன. இதில் முன்னாள் சென்ற ஹெலிகாப்டரின் வால் பகுதி உடைந்து விழுந்தது. தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரும் பலமுறை குட்டிக்கர்ணம் அடித்தபடி தரையில் விழுந்து நொறுங்கியது.
அதே போல பின்னால் சென்ற ஹெலிகாப்டரின் இறக்கை உடைந்து சிதறியதோடு, அந்த ஹெலிகாப்டரும் படுவேகத்தில் தரையில் விழுந்து சிதறியது.
இதில் ஹெலிகாப்டர்களில் இருந்த 9 வீரர்களும் பலியாகிவிட்டனர். மேலும் தரையில் இருந்த 3 பேர் படுகாயமடைந்துள்ளன.
இந்த முழு மோதல் சம்பவத்தையும் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அதை டிவி 7 குஜராத்தி சேனல் ஒளிபரப்பியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத குரு அஸாராம் பாபு உள்ளிட்ட 4 பேர் சென்ற ஹெலிகாப்டர் கோத்ராவில் தரையிறங்குகையில் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் நடந்த மறுநாளே விமானப்படை ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.