கோவை சிறைக்கு மாற்றக் கோரி திருச்சி சிறையில் அல் உம்மா கைதி உண்ணாவிரதம்
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருக்கும் அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கைதி தன்னை மீண்டும் கோவை சிறைக்கே மாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
கோவை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் முகமது உசேன் (32). அவர் அல் உம்மா இயக்கத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டார் என்று கூறப்படுகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் அவர் அங்கிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் சிபி 3 என்ற பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று காலை முதல் திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தன்னை மீண்டும் கோவை சிறைக்கே அனுப்ப வேண்டும் என்றும், அதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அனுமதி அளிக்கும் வரை சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கப் போதவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் உசேனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.