ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது: இல.கணேசன் கண்டனம்
சென்னை: பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக அமைதியான சூழ்நிலை இருப்பது போன்று தோற்றம் அளித்தாலும், ஆங்காங்கு மதமாற்ற நடவடிக்கைகளும், இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தில் சம்பந்தமே இல்லாமல் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள், காவல் துறையினர் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து பாஜக தொண்டர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.