கசாப்பைப் பாதுகாக்க ரூ.50 கோடி... ஆனால் தூக்கில் போட ரூ.50 மட்டுமே!
சட்டம் அப்படித்தான் சொல்கிறதாம். ஒரு கைதியைத் தூக்கில் போட தேவையான செலவுத் தொகையாக 50 ரூபாயை மட்டுமே சட்டம் அனுமதிக்கிறதாம். கேட்கவே செம காமெடியாக இருக்கிறதல்லவா... தொடர்ந்து படியுங்கள்.
அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சட்டத்தைத்தான் நமது அதிகாரிகள் தொடர்ந்து தூசி தட்டி எடுத்து அதை 'தீவிரமாக' பின்பற்றி நடந்து வருகிறார்கள். அந்த சட்டத்தில்தான் இப்படிக் கூறப்பட்டுள்ளதாம். இது மட்டுமல்லாமல் மேலும் பல வினோதமான சட்டங்களையும் நமது அதிகாரிகள் கடைப்பிடித்து வரும் சுவாரஸ்யமான தகவலும் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 96 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1894ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைத்தான் நாம் இன்னும் கடைப்பிடித்து வருகிறோம். அதற்குப் பெயர் இந்திய சிறைச் சட்டம் என்பதாகும். இதை அவ்வப்போது திருத்தினாலும் கூட பல முக்கிய அம்சங்கள் இன்னும் மாறவில்லை, அப்படியேதான் இருக்கிறது.
4 ஆண்டுகளுக்கு முன்புதான் 1971ம் வருடத்திய மகாராஷ்டிர மாநில சிறைச் சட்டம் (தூக்குத் தண்டனைக் கைதிகள்) திருத்தப்பட்டது. இருப்பினும் பல முக்கிய அம்சங்களை அப்படியே வைத்துக் கொண்டனர்.
இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் சில படு வினோதமானவை... அதன் முக்கிய அம்சங்கள்...
- தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவுடன், இறந்தவரின் உடலை அனைத்து மரியாதைகளுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
- கூடுமானவரை ஆம்புலன்ஸ் அல்லது நகராட்சி வாகனத்தில் வைத்து உடலைக் கொண்டு செல்ல வேண்டும்.
- போக்குவரத்துச் செலவுக்காக சிறை கண்காணிப்பாளர் ரூ. 50 வரை நிதி ஒதுக்கீடு செய்யலாம். இந்த செலவானது போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், உடலை தகனம் செய்வதற்கான செலவையும் உள்ளடக்கியதாகும்.
இப்படிக் கூறுகிறது அந்த சட்ட அம்சம்.