தூக்குத் தண்டனை உறுதி... இதுவரை கசாப்புக்குத் தெரியாது!
இதுகுறித்து ஆர்தர் சாலை சிறை கண்காணிப்பாளர் ஏ.சி.ராணே கூறுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை இப்போதைக்கு கசாப்பிடம் தெரிவிப்பது உசிதமல்ல என்று கருதுகிறோம். இதனால்தான் தீர்ப்பு குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும் தீர்ப்பின் நகலும் எங்களுக்கு இதுவரை வரவில்லை. எனவே அதைத் தெரிவிக்காமல் உள்ளோம் என்றார்.
சிறை அதிகாரிகள் பொருத்தமான முறையில் தீர்ப்பின் நகலை கசாப்பிடம் வழங்குவார்கள் என்றும் ராணே கூறினார்.
தீர்ப்பின் நகலை கசாப்பிடம் வழங்க வேண்டியது எங்களது கடமையாகும். இருப்பினும் எப்போது அதைத் தருவது என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் தீர்ப்பின் நகல் எங்களுக்கு இன்னும் கிடைக்காத நிலையில் அதை எப்படி வழங்க முடியும் என்றும் கேட்டார் ராணே. தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதை கசாப்பிடம் கொடுத்து பெற்றுக் கொண்டேன் என்பதற்கான கையெழுத்தை கசாப்பிடம் பெறுவோம் என்றும் தெரிவித்தார் ராணே.
புதன்கிழமைதான் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் என்பது நினைவிருக்கலாம்.
Next >> |