சிலுக்கு நடிச்சா 'சிலுசிலுப்பு'... இந்த சிலந்தி கடிச்சா 'கிளுகிளுப்பு'...!
வீ்ட்டில் எங்காவது சிலந்தி வலையைப் பார்த்தாலே நம்மவர்கள் டென்ஷனாகி விடுவார்கள். ஒட்டடைக் குச்சியை எடுத்து வந்து வலையை துவம்சம் பண்ணி விட்டுத்தான் ஓய்வார்கள். ஆனால் உங்களது பெட்ரூமில் எப்போதும் தங்க வைத்து தாலாட்டும் அளவுக்கு ஒரு வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம், அந்த சிலந்தியின் விஷம், ஆண்மைக் குறைபாட்டையும், உறுப்பு எழுச்சிக் குறைபாட்டையும் போக்கும் அபார தன்மையுடன் இருப்பதால்.
இந்த சிலந்தியின் விஷத்தில் உள்ள டாக்சின்கள், உறுப்பு எழுச்சிக் குறைபாட்டை சட்டென்று தீர்க்கும் அபார மருத்துவக் குணத்துடன் திகழ்கிறதாம். இதனால் இதை இயற்கை வயாகரா என்று மருத்துவர்கள் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
பிரேசில் காட்டுப் பகுதிகளில் உள்ள இந்த சிலந்திக்கு ஆர்ம்ட் ஸ்பைடர், வாழைரப்பழ சிலந்தி என்று பல பெயர்கள் உள்ளன. அதன் அறிவியல் பெயர் போனூட்ரியா நைக்ரிவென்டர் என்பதாகும். தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காதான் இந்த சிலந்திகளுக்குப் பூர்வீகமாகும்.
இந்த வகை சிலந்தியின் விஷத்தை ஜார்ஜியா மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது அதில் அபாரமான பல்வேறு மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சிக் குறைபாட்டைத் தீர்க்கும் அருமருந்தாக இது திகழ்வதையும் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவரான டாக்டர் கெனியா நூன்ஸ் கூறுகையில், இந்த சிலந்தியின் விஷத்தில் பல்வேறு முக்கியமான மூலக்கூறுகள் நிறைய உள்ளன. இவற்றிற்கு டாக்சின்கள் என்று பெயர். இவை ஒவ்வொரு விதமான செயல்பாட்டுக்கு உதவுகின்றன.
குறிப்பாக ஆணுறுப்பை நீண்ட நேரத்திற்கு எழுச்சியுடன் வைத்திருக்க இந்த டாக்சின்கள் உதவுகின்றன. இது முக்கியமான விஷயமாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகப் பெரிய நற்செய்தியாகும்.
சிலந்தியின் விஷமானது மிகவும் அதிக நச்சுத்தன்மை கொண்டது. மரணத்தில் கொண்டு போய் விட்டு விடும். ஆனால் இந்த சிலந்தியின் விஷத்தை மருந்து போல பயன்படுத்த முடியும். ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் கூட உறவுக்கான ஆர்வத்தை இந்த விஷத்தில் அடங்கியுள்ள டாக்சின்கள் அதிகரிக்க உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது.
முதலில் உறுப்பு எழுச்சியற்ற, வயதான எலிகளிடம் இந்த விஷத்தை வைத்து சோதனை நடத்தப்பட்டது. பிஎன்டிஎக்ஸ் 2 என்ற பெயரிலான பெப்டைட் வடிவில் இந்த விஷம் எலிகளுக்குத் தரப்பட்டது. அப்போது அந்த எலிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, ஆணுறுப்பு எழுச்சி அடைவது கண்டுபிடிக்கப்பட்டது. விஷத்தைக் கொடுத்த அரை மணி நேரத்தில் இது நடந்தது. மேலும் அந்த எலிகளுக்கு வேறு எந்த சைட் எபக்ட்களும் ஏற்படவில்லை.
தற்போது வயாகரா பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு சைட் எபக்ட்கள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த சிலந்தியின் விஷத்தால் சைட் எபக்ட் ஏற்படாமல், உறுப்பு எழுச்சி அதிகரிப்பது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும் என்றார்.
இந்த பிரேசில் நாட்டு சிலந்திக்கு எட்டு கால்கள் உள்ளன. நான்கு இன்ச் அளவுக்கு இதன் கால்கள் விரிவடைகின்றன.
இந்த சிலந்தி கடித்து உயிரிழப்போர் எண்ணிக்கையும் வெகு குறைவாம். இதுவரை 7000 பேரை இந்த சிலந்தி கடித்துள்ளதாம். ஆனால் 10 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்பது மிக மிக முக்கியமானதாகும்.
வழக்கமாக சிலந்தி கடித்தால் உயிர் போவது போல வலிக்கும், ஆனால் இந்த சிலந்தி கடித்தால் ஆணுறுப்புக்கு புத்துயிர் கிடைக்கிறது என்பது உண்மையிலேயே ஆச்சரியமானதுதான்...