வெற்றிகரமாக 56வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எல்ஐசி
மக்களின் பணத்தை மக்கள் நலப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் இந்த நிறுவனம் தனது ஆண்டு தினத்தையொட்டி இன்று ஜீவன் தீப் என்ற புதிய சிறிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
என்டெளமென்ட் மற்றும் லாயல்டி அசூரன்ஸ் ஆகிய கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டது இந்த பாலிஸி.
.2011-12ம் ஆண்டில் இதுவரை 357 லட்சம் காப்பீடுகளை விற்றுள்ளது எல்ஐசி. இதன்மூலம் இந்திய காப்பீட்டுச் சந்தையில் 80.9 சதவீதத்தை எல்ஐசியே வைத்துள்ளது. இந்த புதிய பாலிஸிகள் மூலமான முதலாண்டு வருமானம் மட்டும் ரூ. 81514.49 கோடியைத் தாண்டும்.
இதில் ஓய்வூதிய மற்றும் குழுத் திட்டங்களின் (Pension and Group schemes) பிரீமியமான ரூ. 38955.06 கோடியும் அடங்கும். ஓய்வூதிய மற்றும் குழுத் திட்டங்களில் 71.36 சதவீத சந்தை எல்ஐசி வசமே உள்ளது. இத் திட்டத்தின் கீழ் வணிக நிறுவனங்கள் மூலமாக 284.12 லட்சம் காப்பீடுகளும், சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 94.44 காப்பீடுகளும் எல்ஐசியிடம் செய்யப்பட்டுள்ளன.
2011-12ம் ஆண்டில் 185.7 லட்சம் பேருக்கு அவர்களது காப்பீட்டுத் தொகையான ரூ. 66022.82 கோடியை எல்ஐசி வழங்கியுள்ளது. மொத்த பாலிஸி முதிர்வு கோரிக்கைகளில் 93.19 சதவீத கோரிக்கைகளுக்கான பணம், பாலிஸி முதிர்வுத் தேதியிலோ அல்லது அதற்கு முன்போ கொடுக்கப்பட்டுவிட்டது.
மரணம் காரணமாக கோரப்பட்ட கிளைம்களில், எல்ஐசிக்குத் தகவல் கிடைத்த 15 நாட்களில் 94.34 சதவீத பாலிஸிகளுக்கு நிதி தரப்பட்டுவிட்டது.
பாலிஸி முதிர்வு கோரிக்கைகளில் வெறும் 0.5 சதவீத பாலிஸிகளுக்கும், மரணம் காரணமாக கோரப்பட்ட கிளைம்களில் வெறும் 1.22 சதவீதம் பாலிஸிகளுக்கும் மட்டுமே இதுவரை நிதி தரப்படவில்லை.
மொத்தத்தில் பாலிஸிதாரர்களுக்கு எல்ஐசி ரூ. 112,911.82 கோடியை வழங்கியுள்ளது.
எல்ஐசி பல குரூப் பாலிஸிகளையும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு ஜனஸ்ரீ பிமா யோஜனா, ஆம் ஆத்மா பிமா யோஜனா ஆகிய காப்பீட்டுத் திட்டங்களையும், ஜனஸ்ரீ பிமா யோஜனா பாலிஸிதாரரரின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்விக்கு உதவித் தொகை வழங்கும் ஷிக்ஸா சகயோக் யோஜனா என்ற கூடுதல் பாலிஸியையும் எல்ஐசி வழங்குகிறது.
கார்ப்பரேட் சமூக பொறுப்பின் கீழ் எல்ஐசி தனது பொன்விழாவையொட்டி நாடு முழுவதும் இதுவரை 211 அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கும் சமூகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் பலன் பெறும் திட்டங்களுக்கும் என பல தன்னார்வ அமைப்புகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளது.
மேலும் காப்பீட்டுத் திட்டங்களுக்காக எல்ஐசி இதுவரை 27 விருதுகளையும் வென்றுள்ளது. இதில் ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் நம்பிக்கையான பிராண்ட் விருது, பிஸினஸ் சூப்பர் பிராண்ட், சிஎன்பிசி அவாஸ் தொலைக்காட்சியின் நுகர்வோரின் நம்பிக்கை பெற்ற நிறுவன விருது, எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையின் பிராண்ட் ஈகுயிட்டி விருது, கோல்டன் பீகாக் இன்னோவெடிவ் புராடக்ட் விருது, அவுட்லுக் மணி பத்திரிக்கையின் விருது, சிஎன்பிஸி டிவி 18 விருது ஆகியவை முக்கியமானவை.