முன்னாள் திமுக எம்.எல்.ஏ. கொலை: ஆத்திரப்படாமலிருக்க கருணாநிதி வேண்டுகோள்!
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தென்பாண்டி சீமையில் தி.மு.க.வை வளர்த்த மூத்த முன்னோடிகளில் ஒருவரும் - "மிசா'' வில் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவரும் - முதுகுளத்துÖர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக 1971 முதல் 1976 வரையிலும், பின்னர் 1989 முதல் 1991 வரையிலுமாக இரண்டு முறை மிகச்சிறப்பாகப் பணியாற்றியவரும் - கடலாடி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக இருந்தவரும் - கழகத்தின் சொத்துப்பாதுகாப்புக் குழு உறுப்பினராக இருந்தவரும் - கமுதி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக மூன்று முறை பணியாற்றியவருமான காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி படுகொலைக்காளாகி மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன்.
முதுகுளத்தூர் பகுதியில் முதியோர், இளையோர் என்று பாராமல் அனைவரிடமும் அன்பு காட்டி, அமைதி வழியில் அயராமல் மக்கள் பணியாற்றியவர் காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி. சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்காமல் செல்லவேமாட்டார்.
அமைதி காக்கவேண்டும்
நீண்ட நெடிய திடகாத்திரமான உருவம் அவருடையது. எல்லோரிடமும் மிகவும் பொறுமையாகப் பேசுவார். என்ன பகை காரணமாக அவரைக் கொன்றார்களோ தெரியவில்லை.
தி.மு.க. இடுகின்ற கட்டளைகளையேற்று, தி.மு.க.வின் சார்பில் நடத்தப்பட்ட அத்தனை அறப்போராட்டங்களிலும் கலந்து கொள்வார். மதுரை, முகவை மாவட்டங்களில் நான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் என்னுடன் அந்தச் சுற்றுப் பயணங்களில் அவரும் கலந்து கொள்வார். அவரை இழந்து வாடும் அந்தப் பகுதி தி.மு.க.வினருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய மறைவினை மனதிலே கொண்டு எந்தவிதமான ஆத்திரத்திற்கும், கோபத்திற்கும் கழகத் தோழர்கள் ஆளாகாமல், அமைதி காக்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் தி.மு.க. உறுப்பினர் காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி மறைவினையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தி.மு.க. அமைப்புகள் அனைத்தும் தி.மு.க. கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், தி.மு.க.வின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.