பாஜக ஒரு புறம், அதிமுக, திமுக மறுபுறம் அமளி: இரு அவைகளும் ஒத்தி வைப்பு
இன்று லோக்சபா கூடியவுடனேயே நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் இந்தியாவில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோன்று ராஜ்யசபாவிலும் அமளி ஏற்பட்டதால் அந்த அவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் 12 மணிக்கு இரு அவைகளும் கூடியவுடனேயே பாஜகவினர் பிரதமர் பதவி விலகக் கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து லோக்சபா நாள் முழுவதும், ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டன.
முன்னதாக ராஜ்யசபாவில் சமாஜ்வாடி கட்சியினரும் கோஷங்கள் எழுப்பினர். ஆனால் பாஜகவினரின் அமளியில் அவர்கள் என்ன கோஷமிட்டனர் என்பது கேட்கவில்லை. திமுகவினர் இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டைகளைப் பிடித்திருந்தனர். பாஜகவுக்கு ஆதரவாக சிவ சேனா மற்றும் அகாலி தளம் ஆகியவையும் அமளியில் ஈடுபட்டன.
இன்றுடன் சேர்த்து நாடாளுமன்றம் 9 நாட்களாக முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.