யாழ்ப்பாணம் போரின்போது வெளியேறியவரின் தியேட்டரை அபகரித்த டக்ளஸ் தேவானந்தா!
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரபலமானக இருந்தது ஸ்ரீதர் தியேட்டர். இதன் உரிமையாளர் ரத்தின சபாபதி மகேந்திர ரவிராஜ். 16 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்களப் படைக்கும் கடும் சண்டை நடந்தது. இதனால் யாழ்ப்பாணத்தை விட்டு தமிழர்கள் வெளியேறினார்கள்.
ரவிராஜ் ஆஸ்திரேலியா சென்று மெல்போர்ன் நகரில் வசிக்கிறார். ரவிராஜ் வெளியேறியதுமே அவரது சினிமா தியேட்டரை தற்போதைய இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா கைப்பற்றிக் கொண்டாராம்.
இது பற்றி ரவிராஜ் இப்போது புகார் கூறியுள்ளார். தி ஆஸ்திரேலியன் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "யாழ்ப்பாணத்தில் உள்ள எனது ஸ்ரீதர் தியேட்டரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கையகப்படுத்தி வைத்திருக்கிறார். 16 வருடமாக அவர் வாடகை கூட தருவதில்லை.
யாழ்ப்பாணத்தில் உள்ள எனது சொத்துக்களை மீட்க சட்ட நிபுணரை அமர்த்துமாறு நண்பர்களிடம் சொன்னேன். ஆனால் யாரும் அமைச்சருக்கு எதிராக நிற்க தயாராக இல்லை. ஏனெனில் அவரைப்பற்றி அங்கு அவ்வளவு பயம் இருக்கிறது. அவரிடமிருந்து தியேட்டரை மீட்பது கடினம். இந்த வழக்கு பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டே போகும் என்று நண்பர்கள் கூறினார்கள்.
1996-ம் ஆண்டு தியேட்டரை தானே எடுத்துக் கொள்வதாக என்னுடன் பேசினார். சண்டை முடிந்ததும் தியேட்டரை நான் மீண்டும் திறக்கப்போகிறேன் என்றேன். அதற்கு அவர் நீங்கள் எப்போது தியேட்டரை திறப்பதாக இருந்தாலும் நான் விட்டுவிடுகிறேன் என்றார். இதனால் நான் சம்மதித்தேன்.
ஆனால் அதன்பிறகு தியேட்டரை திறப்பது பற்றி அவரிடம் பலநூறு தடவை பேசினேன். பல கடிதங்களை அனுப்பினேன். எதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.
தியேட்டர் மீண்டும் என் கைக்கு வருமா தெரியவில்லை. ஏனெனில் அவர் ஆபத்தானவர் என்று சொல்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையும் ஆபத்தில் முடிந்து விடலாம். இனிமேலும் என்ன நடக்கப் போகிறது என்று தெரிய வில்லை.
நான் எப்போது கேட்டாலும் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று டக்ளஸ் கூறினார்.
ஒவ்வொரு வருடமும் அவர் இதனைத்தான் சொல்கிறார். இப்போது நான்தான் தியேட்டர் அதிபரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்கிறார். நான்தான் உரிமையாளர் என்பது யாழ்ப்பாண மக்கள் அனைவருக்கும் தெரியும். தியேட்டர் வாடகையை எனது கூட்டாளியுடன் கொடுத்து வருவதாக சொல்கிறார். அவர் சொன்னபடி கூட்டாளி யாரும் இல்லை. வாடகை தரவும் இல்லை," என்று கூறியுள்ளார்.
டக்ளஸ் மீது கடத்தல்-கொலை வழக்கு இந்தியாவில் உள்ளது. இந்த வழக்கில் இந்தியாவில் அவர் தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனை ஆஸ்திரேலியப் பத்திரிகையும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.