கடாபி மகனுக்கு இரக்கம் காட்டக் கூடாதா?... டோனி பிளேருக்கு காதலி கோரிக்கை!
இவர்தான் சைப் கடாபியின் கடைசிக் காதலி ஆவார். இவர் இஸ்ரேலைச் சேர்ந்த மாடல் அழகி ஆவார். தற்போது லிபியாவில் புரட்சிப் படையினர் வசம் சிக்கி கைதியாக உள்ளார் சைப் கடாபி. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு லிபியாவில் ஏற்பட்ட பெரும் புரட்சியின்போது கடாபியைப் பிடித்துக் கொலை செய்தனர் புரட்சிப் படையினர். அதன் பின்னர் சைபைப் பிடித்தனர். இருப்பினும் இதுவரை அவருக்கு தண்டனை கொடுக்காமல் கைதியாக வைத்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
சைப் அல் இஸ்லாம் கடாபி என்று அழைக்கப்படும் சைபுக்கு நிறையக் காதலிகள் இருந்தனர். அவர்களில் கடைசிக் காதலி என்று அழைக்கப்படுபவர்தான் இந்த ஆர்லி. சைப் கடாபிக்கும், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இதனால்தான் சைபின் உயிரைக் காப்பாற்ற டோனி பிளேர் உதவ வேண்டும் என்று அவருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் ஆர்லி.
சைப் விவகாரத்தில் நியாயமாக நடக்காது லிபியா என்ற கருத்தை பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் முன் வைத்து வருகின்றனர். அவரது வழக்கை தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இதுவரை பலன்இல்லை.
இந்த நிலையில்தான் சைபின் 41 வயது முன்னாள் காதலியான ஆர்லி, டோனி பிளேருக்குக் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டோனி பிளேருடன் மிக நெருக்கமாக பழகி வந்தவர் சைப். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். எனவே தனது நண்பரைக் காக்க டோணி பிளேர் முன்வர வேண்டும். இது அவருக்கான நேரம். கடவுள் மீ்து நம்பிக்கை கொண்டவர் பிளேர். ஒரு நல்ல கிறிஸ்தவராக அவர் கஷ்டப்படும் தனது நண்பருக்கு உதவ முன்வர வேண்டும் என்றார் ஆர்லி.
சைப் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் 2007ம் ஆண்டு பிஎச்டி ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு நிறைய அறிவுரைகளை வழங்கி கடிதம் எழுதியுள்ளார் பிளேர். அந்தக் கடிதத்தையும் ஆர்லி காட்டினார்.
ஆர்லியின் இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை பிளேர் தரப்பில் கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.