அரசு பணியில் பதவி உயர்வில் எஸ்சி., எஸ்.டி.யினருக்கு இடஒதுக்கீட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: அரசுப் பணிகளில் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. எஸ்சி, எஸ்.டி பிரிவினருக்கு அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு இதுவரை வழங்கபப்டாமல் இருந்தது. இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த 20 ஆண்டுகாலமாக இந்த கோரிக்கை வலியுறுத்தபப்ட்டு வருகிறது.
அண்மையில் இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசுப் பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சமாஜ்வாதி கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்த இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி லோக் ஜன்சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பியபடி போராட்டம் நடத்தியிருந்தனர்.