டெசோ மாநாட்டு தீர்மானங்களை கொடுக்க ஐ.நா. செல்லும் மு.க.ஸ்டாலின்
கடந்த மாதம் 12ம் தேதி சென்னையில் உள்ளை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை டி.ஆர். பாலு தலைமையிலான திமுக எம்.பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த 21ம் தேதி சந்தித்து அளித்தது. மேலும் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்றுமாறு அந்த குழு பிரதமரை வலியுறுத்தியது.
டெசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐ.நா.சபையிடம் அளிக்கப்படும் என்று திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தீர்மானங்களை கொடுக்க திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலும் விரைவில் ஐ.நா. சபைக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் ஐ.நா. அதிகாரிகளிடம் தீர்மானங்களை சமர்பித்துவிட்டு அவற்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனி ஈழம் தான் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் டெசோ மாநாட்டில் தனி ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் சிறையில் வீரபாண்டியாரை சந்தித்த ஸ்டாலின்:
வேலூர் சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக பொருளாளர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஏற்கனவே வந்து சந்தித்த மு.க. ஸ்டாலின் இன்று காலை மீண்டும் சந்தித்து பேசினார்.
ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, முரசொலி செல்வம், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் காந்தி ஆகியோர் சென்றிருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 3 மாத காலமாக சிறையில் வாடுகிறார். அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமாக தெம்பாக உள்ளார். எத்தனை பொய் வழக்குகள் தொடர்ந்தாலும் அவற்றை சந்திக்கும் ஆற்றலுடன் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து என்னிடம் விசாரித்தார்.
திமுகவினரைப் பழி வாங்கவே அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. ஆனால் நீதிமன்றங்களில் நீதியை நிலைநாட்டி திமுகவினர் விடுதலை பெற்றுவிடுகின்றனர். வீரபாண்டி ஆறுமுகம் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் பொய் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து அவர் விடுதலை ஆவார். ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டுள்ள எந்த குண்டர் சட்டமும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோன்று தான் வீரபாண்டி ஆறுமுகம் மீது போடப்பட்டுள்ள வழக்கும் முடியும் என்றார்.