கடலூரில் நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை-மர்மநபர்களுக்கு வலை
கடலூர்: கோவையில் இருந்து கடலூருக்கு வந்த நகை வியாபாரியின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கத்தி காட்டி மிரட்டியும் 1.5 கிலோ தங்க நகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் செல்வராஜபுரம் ஜனனி இல்லத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(35). நகை வியாபாரியான இவர், வெளியூர்களுக்கு சென்று தங்க நகைகளுக்கான ஆர்டர் பிடித்து, நகைகளை செய்து கொடுக்கும் தொழியலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடலூரில் உள்ள நகை கடைகளில் வெங்கடேஷ் ஆர்டர் எடுத்திருந்தார். அதற்கேற்ற டிசைன்களில் நகைகளை வடிவமைத்து கொண்டு, கடந்த 3ம் தேதி கோவையில் இருந்து தனியார் பஸ் மூலம் கடலூருக்கு சென்றார். அவருடன் கணேசன்(40), சிவக்குமார்(41) ஆகிய 2 நகை வியாபாரிகளும் கடலூருக்கு சென்றனர்.
நேற்று காலை 6 மணிக்கு கடலூர் உழவர் சந்தை அருகே பஸ் சென்று நின்றது. வெங்கடேஷ், மற்ற 2 வியாபாரிகளிடம் இருந்து விடைப்பெற்று கொண்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை அடுத்த சின்னவாணியார் தெருவில் உள்ள லாட்ஜிக்கு சென்று கொண்டிருந்தார்.
லாட்ஜ் அருகே வந்த போது வெங்கடேஷை, யாரோ முதுகில் தட்டி கூப்பிட்டனர். அப்போது திரும்பி பார்த்த வெங்கடேஷின் கண்களில் மிளகாய் பெட்டியை தூவிய மர்மநபர், நகைகள் வைத்திருந்து கறுப்பு நிற பையை பறித்து செல்ல முயன்றார். வெங்கடேஷ் பையை இறுக்கமாக பிடித்து கொண்ட போது, மர்மநபர் கத்தி காட்டி மிரட்டியுள்ளார்.
இதில் பயந்து போன வெங்கடேஷ், நகைகள் இருந்த பையை விட்டுவிட்டார். அதன்பிறகு அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தயாராக காத்திருந்த மற்றொரு நபருடன் தப்பியோடிவிட்டார். வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், கொள்ளையர்களை துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். வெங்கடேஷ் அளித்த தகவலின் பேரில், மர்மநபர்களை பிடிக்க போலீசார் முயற்சி செய்தும் யாரும் கைது செய்யப்படவில்லை.
நகை வியாபாரி வெங்கடேஷ் வாரந்தோறும் 2 முறை கடலூர் வந்து செல்வதை அறிந்த நபர்கள் தான், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வெங்கடேஷ் வழக்கமாக தங்கும் லாட்ஜ் பொறுப்பாளர் ரமேஷ், கொள்ளை சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து சந்தேகத்திற்கு இடமாக லாட்ஜ் பொறுப்பாளர் ரமேஷ் உட்பட சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.