கூவி, கூவி விற்றாலும் வாங்க ஆளில்லை: குப்பையில் வீசப்பட்ட முருங்கைக்காய்கள்
தென்னிந்தியர்களின் சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் காய்களில் ஒன்று முருங்கைக்காய். பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.15 கொடுத்தாலும் நல்ல முருங்கைக்காய் கிடைக்காது. ஆனால் தற்போது கோடைகாலம் போன்று வெயில் அடிப்பதால் முருங்கைக்காய்கள் அமோகமாக விளைந்துள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக சந்தைகளுக்கு முருங்கைக்காய் வரத்து பெருமளவு அதிகரி்த்துள்ளது. வரத்துக்கு ஏற்ப வாங்க ஆள் இல்லாததால் கடைக்கு கடை ஏராளமான முருங்கைக்காய்கள் குவிந்து கிடக்கின்றன.
நெல்லை டவுன் தச்சநல்லூர் சாலையில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டில் கூவி கூவி விற்றாலும் வாங்க ஆள் இல்லாமல் தேங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருங்கைக்காய்கள் நேற்று நயினார்குளக்கரையில் வீசப்பட்டு கிடந்தன. காசுகொடுத்து வாங்க முடியாத சில ஏழைகள் இவற்றிலிருந்து நல்ல முருங்கைக்காய்களை பொறுக்கிச் சென்றனர்.
முருங்கைக்காய் மொத்த விற்பனைக்கு கிலோ ரூ.7க்கும், சில்லரை விற்பனைக்கு கிலோ ரூ.10க்கும் விற்கப்படுகிறது. வரத்து அதிகமாக இருப்பதால் விலை இறங்குமுகமாகவே உள்ளது. முருங்கைக்காய் மட்டுமின்றி கத்தரிக்காயின் விலையும் கடந்த சில நாட்களாக இறங்குமுகமாகவே இருந்தது. ஓணம் பண்டிகை முடிவடைந்ததால் கேரளாவுக்கு செல்லும் காய்கறிகளின் அளவு குறைந்துவிட்டது. இதனாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.