கல்விப் பிரச்சனையைப் பற்றி திமுகவும், அதிமுகவும் எப்போதாவது பேசியதுண்டா?: டி.கே.ரங்கராஜன்
மதுரை: கல்விப் பிரச்சனைகளைப் பற்றி திமுகவும், அதிமுகவும் பேசியதுண்டா என்றும், சட்டசபையில் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை வெறும் 10 நிமிடத்தில் முடித்து கூத்தாக மாற்றுகிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பேரணி மறறும் பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டு பேசியாதவது,
தமிழகத்தில் கல்வி வியாபாரத்தோடு சேர்ந்து கல்வித்துறை பதவிகள் அமோகமாக வியாபாரமாகிக் கொண்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கல்யாணி மதிவாணன் என்பவர், நாவலரின் மருமகள் என்பதைத் தவிர வேறு எந்தவிதமான கல்வித்துறை தகுதியும் இல்லாதவர். அடிப்படையில் அவர் ஒரு உதவிப் பேராசிரியர் மட்டுமே. ஆனாலும் தான் ஒரு பேராசிரியர் என்று தனது சுய விபரக்குறிப்பில் குறிப்பிட்டு, எப்படியோ துணை வேந்தர் பதவியைக் கைப்பற்றியுள்ளார்.
இதே பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்பு துணை வேந்தராக இருந்தவர் திமுகவின் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மாப்பிள்ளை. இதைத் தவிர அவருக்கும் வேறு எந்தத் தகுதியும் இல்லை..
திமுக ஆட்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிகள் 4.5 கோடி ரூபாய்க்கும், 5 கோடி ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டன. அதே போன்ற ஏலம் இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எப்படி எந்த அளவிற்கு சம்பாதித்துவிட முடியும் என்று நமக்கு கேள்வி எழுகிறது. ஆனால் உண்மை என்ன?
பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவிலிருந்து (யூஜிசி) ஏராளமான நிதி வருகிறது. அது மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி உண்மையில் அதற்காகச் செலவு செய்யப்படுவதில்லை. தமிழகத்தில் எல்லா பல்கலைக்கழகங்களிலும் துணை வேந்தர் நியமனம் எப்படி நடக்கிறது? அதில் என்னென்ன கோளாறு நடக்கிறது என்பதை எல்லாம் நாம் விவாதிக்க வேண்டி உள்ளது.
கேரளத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று விசாரித்தேன். ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள் துணை வேந்தர் பதவிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு போதும் பணம் விளையாடுவது இல்லை எனத் தெரிய வருகிறது.
ஒரு காலத்தில் கணித மேதை ராமானுஜம், சர்.சி.வி.ராமன் போன்றவர்களைக் கொடுத்த பல்கலைக்கழகங்கள் இன்றைக்கு இவர்களது ராஜ்ஜியத்தின் கீழ் எப்படி இருக்கின்றன. என்றைக்கேனும் கல்விப் பிரச்சனைகளைப் பற்றி திமுகவும், அதிமுகவும் பேசியதுண்டா?
சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை வெறும் 10 நிமிடத்தில் முடித்து கூத்தாக மாற்றுகிறார்கள் என்றார்.