வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரத்தில் தீ.. பெட்டிகளில் பரவிய புகை வாசம்-பயணிகள் அதிர்ச்சி
திருச்சி: வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரத்தில் தீப்பொறியுடன் கரும்புகையும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நடுவழியில் ரயிலை நிறுத்தப்பட்டது.
நேற்று காலை 6.45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு இந்த ரயில் புறப்பட்டது. 8.10 மணியளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சமுத்திரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது ரயில் என்ஜினுக்கு பின்னால் உள்ள 3 பொதுப் பெட்டிகளின் சக்கரத்தில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது.
ரயிலுக்குள் தீப்பிடித்து எரிந்தது போன்ற கருகிய வாசனையை உணர்ந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில் ரயில் என்ஜின் டிரைவரும் இதை உணர்ந்து ரயிலை உடனடியாக நிறுத்தினார். மேலும் கார்டுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தார். டிரைவரும் கார்டும் பார்வையிட்டபோது சக்கரத்தில் பிரேக் பகுதியில் தீப்பொறி ஏற்பட்டு கரும்புகை வெளிவந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிரேக் கட்டைகளை சரி செய்த பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.
திருச்சியை ரயில் அடைந்ததும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை அதிகாரிகள் உறுதி செய்த பின் ரயில் மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டு சென்றது.