தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள்: 9ம் தேதி முன்பதிவு துவக்கம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை உள்ளிட்ட பல்வேறு தொலைதூர நகரங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வருபவர்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம்.
இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நெருக்கடி இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள 7 பணிமனைகள் மூலம் ஒரு பணிமனைக்கு 5 சிறப்பு பேருந்துகள் வீதம் 40 பேருந்துகளை இயக்கவிருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் 9ம் தேதி துவங்குகிறது. அரசு போக்குவரத்து கழகம் மூலம் 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.