சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழா- குடியரசுத் தலைவர் பங்கேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழா இன்று மாலை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆளுநர் ரோசைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்க மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழா மலரை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ10 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள உள் அரங்கம் மற்றும் அருங்காட்சியகத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
பிரணாப் முகர்ஜி உரை
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது உரையில், இந்தியாவின் பழமையான பாரம்பரியமிக்க சிறப்புமிக்க நீதிமன்றம். சிறப்புமிக்க நீதிபதிகள் பணியாற்றிய நீதிமன்றம் இது. இந்திய நீதித்துறைக்கு பல ஜாம்பவான்களை கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதித்துறையின் கலங்கரை விளககமாக திகழ்கிறது சென்னை உயர்நீதிமன்றம். 1951-ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளவும் காரணமாக இருந்தது சென்னை உயர்நீதிமன்றம். இதேபோல் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளையும் வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் என்றார்
தமிழக ஆளுநர் ரோசய்யா தமது உரையில், நீதித்துறை இல்லாமல் ஜனநாயகம் இல்லை. நீதித்துறையின் மீதான மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா நடைபெற்று வருகிறது என்றார்.
நீதிமன்ற மேம்பாடுக்கு ரூ5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகையில், மக்களுக்கு தாமதமின்றி நீதி வழக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமநீதி வழங்க வேண்டும். நாடு முழுவதும் நீதிமன்றங்களை மேம்படுத்த ரூ5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 452 நீதிமன்றங்கள் கணிணிமயமாக்கப்பட உள்ளன. நடப்பாண்டில் ரூ206 கோடியை நீதிமன்ற மேம்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளோம். வழக்குகளை விரைந்து முடிப்பதில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார் அவர்.
வழக்கறிஞர் சங்கத்துக்கு நிதி அதிகரிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது உரையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புகளை விவரித்தார். அவர் தமது உரையில், வழக்கறிஞர் சங்கத்துக்கு தமிழக அரசு இதுவரை வழங்கி வந்த ரூ2 லட்சம் நிதியை ரூ 5.52 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். மேலும் பல்வேறு நீதிமன்ற பணிகளுக்காக ரூ160 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், இந்தியாவிலேயே வழக்குகளை விரைந்து முடிப்பது சென்னை உயர்நீதிமன்றம்தான். தமிழக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications