முஸ்லீம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கிறவர்கள்-அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சைப் பேச்சு
இன்னும் கூட அடங்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அஸ்ஸாமில் கலவரம் நீடித்தபடிதான் உள்ளது. முஸ்லீம்கள் அங்கு பெரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் முஸ்லீம்கள் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்தை அஸ்ஸாம் முதல்வர் கோகாய் வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமில் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருக அவர்களின் படிப்பறிவின்மைதான் காரணம் என்று கோகாய் கூறியுள்ளார்.
கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வைஸ் என்ற டிவி ஷோவின்போது பேசுகையில்தான் கோகாய் இவ்வாறு தெரிவித்தார்.
அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
தாப்பர்: அஸ்ஸாமில் சில மாவட்டங்களில் இந்துக்களை விட முஸ்லீம்கள் அதிகஅளவில் பெருகியுள்ளனர். குறிப்பாக கோக்ரஜாரில் 19 சதவீத அளவுக்கு முஸ்லீம்கள் அதிகரித்துள்ளனர். டுப்ரியில் 29 சதவீத அளவிலும், போங்கய்கானில் 31 சதவீத அளவிலும் முஸ்லீம்கள் அதிகரித்துள்ளனர். இது இயற்கையான அதிகரிப்பாக இருக்க வாய்ப்பில்லை. வங்கதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்ததன் விளைவாகவே இது இருக்க முடியும். உங்களது கருத்து.
தருண் கோகாய்: இது படிப்பறிவின்மையால் வந்தது. இங்குள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் 6, 7, 8, 9, 10 என்று உறுப்பினர்கள் உள்ளனர். இதெல்லாம் படிப்பறிவி்ன்மையால் ஏற்படும் விளைவுகள்.
தாப்பர்: படிப்பறிவில்லாததால்தான் முஸ்லீம்கள் அதிக அளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்று நீங்கள் கூறுகிறீர்களா...?
தருண் கோகாய்: ஆமாம்.
தாப்பர்: நீங்கள் சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?
தருண் கோகாய்: ஆமாம், படிப்பறிவில்லாததால்தான் இந்த நிலை ஏற்படுகிறது.
தாப்பர்: முதல்வர் அவகர்களே இது மிகவும் சர்ச்சைக்குரிய கருத்து. உங்களது கருத்தைப் பார்த்தால், படிப்பறிவில்லாதவர்கள் அதிக அளவில் குழந்தைகளைப் பெறுவதில் கவனமாக உள்ளனர் என்பது போல மக்கள் நினைக்கக் கூடும்.
தருண் கோகாய்: 100 சதவீதம் எனது கருத்தில் நான் உடன்பாடு கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் கோகாய்.